முகப்பு
இந்தியா

நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு ராமர் கோயிலுக்கு செல்லத் தயார்: சசி தரூர்

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தால் அது பிரதமருக்கு ஆதரவாக செயல்படும் ஒன்றாக இருந்திருக்கக் கூடும்.

Updated On : 27 ஜனவரி 2024, 7:46 pm IST
பகிர்:

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தால் அது பிரதமருக்கு ஆதரவாக செயல்படும் ஒன்றாக இருந்திருக்கக் கூடும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற்ற ராமர் கோயில் பிரதிஷ்டையில் காங்கிரஸ் கலந்துகொள்ளாதததை ஆதரித்துப் பேசிய சசி தரூர், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியலை மையப்படுத்திய கருத்துகள் விலகிய பிறகு ராமர் கோயிலுக்குச் செல்ல தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: காங்கிரஸின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. காங்கிரஸ் உறுப்பினர்கள் அவர்களது மதம் சார்ந்த நம்பிக்கைகளில் சுதந்திரமாக உள்ளார்கள். அனைத்து மதங்களையும் காங்கிரஸ் மதிக்கிறது. அதனால், வழிபாட்டுக்காக நான் கோயிலுக்கு போகிறேன், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிக்காக அல்ல. பிரதமரை மையப்படுத்தி நடைபெற்ற அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்டது பிரதமருக்கு ஆதரவாக இருக்கும் விதமாக காட்டுவதற்காகவே. காங்கிரஸ் இதுபோன்ற ஆதரவினை அளிக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன் என்றார். 

ராமர் கோயில் பிரதிஷ்டைக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சௌதரி உள்பட பல தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதும், அதனை அவர்கள் பணிவுடன் மறுத்ததும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.