நியூஸ்கிளிக் நிறுவனத்தைச் சேர்ந்த பிரபீர் புர்கயஸ்தா மற்றும் அமித் சக்ரவர்த்தி ஆகியோருக்கான காவலை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீனாவிடமிருந்து நிதியைப் பெற்று இந்திய இறையாண்மைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், நாட்டிற்கு எதிராக வெறுப்புணா்வைப் பரப்பியதாகவும் நியூஸ்கிளிக் இணைய செய்தி நிறுவனம் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிக்க | தெருநாயால் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் பலி
அதன் அடிப்படையில் நியூஸ்கிளிக் நிறுவனா் மற்றும் ஆசிரியரான பிரபீா் புா்கயஸ்தா, மனிதவளப் பிரிவுத் தலைவா் அமித் சக்ரவா்த்தி ஆகியோா் 2023 அக்டோபரில் கைது செய்யப்பட்டனா். அவா்கள் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனா்.
இந்த வழக்கில் முன்பு குற்றம் சாட்டப்பட்டிருந்த அமித் சக்ரவர்த்தி சமீபத்தில் சாட்சியாக மாறினார்.
இதையடுத்து திங்கள்கிழமை (ஜன.29) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஹர்தீப் கௌர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரபீா் புா்காயஸ்தா மற்றும் சாட்சியாக மாறியுள்ள அமித் சக்ரவா்த்தி ஆகியோருக்கு பிப்ரவரி 17-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதையும் படிக்க | 2024 தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் இந்தியாவில் இனி தேர்தல் நடத்தப்படாது: மல்லிகார்ஜுன கார்கே
முன்னதாக, இந்த விவகாரத்தில் மன்னிப்பளிக்க வேண்டுமென்று கோரிய அமித் சக்ரவர்த்தி இந்த வழக்கு குறித்த தேவையான விவரங்களை தில்லி காவல்துறையிடம் தெரிவிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து ஜனவரி மாதத் தொடக்கத்தில் அமித் சக்ரவர்த்தி சாட்சியமாக மாறுவதற்கு நீதிபதி அனுமதியளித்தார்.