லடாக் லே பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 -ஆகப் பதிவு
லடாக்கில் உள்ள லே பகுதியில் புதன்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகுகளாகப் பதிவானது
லடாக்: லடாக்கில் உள்ள லே பகுதியில் புதன்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகுகளாகப் பதிவானது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லடாக் லே பகுதியில் புதன்கிழமை காலை 8.12 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
பூமிக்கு அடியில் 150 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.4 அலகுகளாகப் பதிவானது என தெரிவித்துள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
கடந்த மாதம் அஸ்ஸாமில் 3.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
லே மற்றும் லடாக் இரண்டும் நாட்டின் நில அதிர்வு மண்டலம் - 5 இல் உள்ளன. அதாவது அவை பூகம்பங்களால் பாதிக்கப்படும் தன்மையின் அடிப்படையில் மிக அதிக ஆபத்து நிகழும் பகுதியில் அமைந்துள்ளதால் லே மற்றும் லடாக் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் மற்றும் பிராந்தியத்தின் டெக்டோனிக் அமைப்பு தொடர்பான அறிவியல் உள்ளீடுகளின் அடிப்படையில் நாட்டின் பூகம்பத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த உள்ளீடுகளின் அடிப்படையில், இந்திய தரநிலைகள் பணியகம் (பிஐஎஸ்) நாட்டை மண்டலங்கள் 5, 4, 3 மற்றும் 2 என நான்கு நில அதிர்வு மண்டலங்களாகப் பிரித்துள்ளது. இதில், மண்டலம் 5 மிக அதிகயளவிலான நில அதிர்வு ஏற்படும் மண்டலமாகவும், மண்டலம் 2 குறைந்த அளவிலான நில அதிர்வுடன் தொடர்புடைய மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது.