உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து பாறைகள் மோதியதில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் சத்வபீபால் அருகே கவுச்சருக்கும் கர்ணபிரயாகுக்கும் இடையே இந்த விபத்து நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் நிர்மல் ஷாஹி (36), சத்ய நாராயணா (50) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் இமயமலை கோயிலில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது, மலையில் இருந்து உருண்டுவந்த பாறைகள் மோதியதில் இருவரும் உயிரிழந்தனர்.
நிலச்சரிவின் இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரின் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் கௌச்சர், ருத்ரபிரயாக், ஜோஷிமத் மற்றும் பத்ரிநாத் இடையே பினோலா உள்ளிட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் எல்லை சாலைகள் அமைப்பினர் சாலைகளை சுத்தம் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு காரணமாக ருத்ரபிரயாக்-கேதார்நாத் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்றும், நாளையும் குமாவோன் மற்றும் கர்வால் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் நீர்நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.