அசாமில் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்துக்கு சுமார் 24.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கனமழை, வெள்ளம் ஏற்பட்ட நிலையில் அங்குள்ள 30 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் உள்ள ஆறுகள் அபாயக் கட்டத்தை தாண்டி ஓடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தாண்டு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆகவும், நிலச்சரிவு மற்றும் புயல் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திப்ருகர் மாவட்டத்தில் நேற்று முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் அதிகாரிகளுடன் கூட்டம் நடைபெற்றது. மேலும் முதல்வர் வெள்ள நிலைமையை ஆய்வு செய்தார்.
திப்ருகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிறகு, அசாம் ஆரோக்கிய நிதி, சுகாதார நிதியுதவித் திட்டம் உள்பட பல விஷயங்களை நாங்கள் மதிப்பாய்வு செய்தோம் என்று முதல்வர் கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடிய பின்னர், அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் கூறினார்.
சுத்தமான குடிநீர் விநியோகம் குறித்து அவர் கூறுகையில், வெள்ளம் மாநிலம் முழுவதும் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ் இக்கட்டான காலக்கட்டத்திலும் சுத்தமான குடிநீரை வழங்கி வருதாகவும் அவர் கூறினார்.
கச்சார், கம்ரூப், ஹைலகண்டி, ஹோஜாய், துப்ரி, நாகோன், மோரிகான், கோல்பாரா, பார்பெட்டா, திப்ருகார், நல்பாரி, தேமாஜி, போங்கைகான், லக்கிம்பூர், ஜோர்ஹாட், சோனிட்பூர், கோக்ரஜார், கரீம்கஞ்ச், தெற்கு சல்மாரா, தர்ராங் மற்றும் டின்சுகியா ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருள்கள் வழங்கி வருகின்றனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.