ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் ராணுவ வீரர் சுட்டுக்கொலை!
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோடர்காம் கிராமத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத் துறைக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, சிஆர்பிஎஃப், இராணுவம் மற்றும் உள்ளூர் போலீஸார் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கைக்குப் பின்னர் இந்த மோதல் ஏற்பட்டது.
கிராமத்தினுள் நுழைந்த ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்குமிடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் துப்பாக்கிச்சூடு குறித்து எக்ஸ் தளத்தில் காஷ்மீர் போலீஸ் நிர்வாகம் இன்று பதிவிட்டுள்ளனர்.
தற்போது துப்பாக்கிச்சூடு நடந்த இந்தப் பகுதியில் சமீபகாலமாக பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, தோடா மாவட்டத்தின் கண்டோ பகுதியில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.