ஹிந்து மதத்தை ராகுல் இழிவுபடுத்தவில்லை: ஜோதிர்மட சங்கராச்சார்யா
மக்களவையில் ராகுல் காந்தி பேசியது குறித்து ஜோதிர்மட சங்கராச்சார்யா அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி கருத்து..
காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ஹிந்து மதத்தை அவமதிக்கவில்லை என உத்தரகண்ட் ஜோதிர்மட சங்கராச்சார்யா அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
ஹிந்து மதத்தைக் குறிப்பிட்டு மக்களவையில் ராகுல் காந்தி பேசியது, ஹிந்து மதத்தை அவமதிக்கும் வகையிலும், ஹிந்துக்களை புண்படுத்தும் வகையிலும் இருந்ததாக பாஜகவினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்களவையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி ஜூலை 1ஆம் தேதி பேசும்போது ஹிந்து கடவுள் படத்தை காண்பித்து உரையாற்றினார்.
ராகுல் பேசியதாவது, ''தைரியத்தை பற்றி ஒரு மதம் மட்டும் பேசவில்லை. இஸ்லாம், கிறிஸ்துவம் உள்ளிட்ட அனைத்து மதங்களும் தைரியத்தைப் பற்றி பேசுகின்றன.
நமது நாட்டின் மாமனிதர்கள் அகிம்சை குறித்து பேசியிருக்கிறார்கள். ஆனால், ஹிந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் வன்முறை, வெறுப்பு, பொய் உள்ளிட்டவை குறித்து மட்டுமே பேசி வருகிறார்கள். அவற்றை ஹிந்து மதம் பரப்பாது. நீங்கள் உண்மையான ஹிந்துக்கள் அல்லர். எதற்கு அஞ்சதே, யாரையும் அச்சத்திற்குள்ளாக்காதே என்று சிவபெருமான் வாக்கு'' எனப் பேசியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்து பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஹிந்துக்களை வன்முறையாளர்கள் எனக் குறிப்பிட்ட ராகுல் காந்தி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர்.
அவையில் ராகுல் பேசியது, ஹிந்து மதத்தை அவமதிக்கும் வகையிலும், ஹிந்துக்களை புண்படுத்தும் வகையிலும் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், மக்களவையில் ராகுல் காந்தி பேசியது ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் இல்லை என உத்தரகண்ட் ஜோதிர்மடத்தின் சங்கராச்சார்யா அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, ''ராகுல் காந்தி ஹிந்து மதத்தை இழிவுபடுத்தியதாகக் கூறப்பட்ட பிறகு, அவருடைய பேச்சை நான் கேட்டேன். அவர் அப்படி எதுவும் பேசவில்லை.
ஹிந்து மதத்தில் வன்முறைக்கு இடமில்லை என்று கூறுகிறார். வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, அவரது பேச்சைத் திரித்து, அதைப் பரப்புவது குற்றம். அதில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.