பல்கலை., உணவக விடுதி சட்னியில் நீச்சலடித்த எலி!
விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் பாதுகாப்பு இல்லை என மாணவர்கள் எதிர்ப்பு.
தெலங்கானாவில் உள்ள பல்கலைக் கழக விடுதி உணவகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சட்னியில் எலி விழுந்து, மிதந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
மேலும், விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் பாதுகாப்பு இல்லை என்றும், கவனமின்றி நிவாகத்தினர் செயல்படுவதாகவும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செயல்பட்டுவரும் அரசு உதவி பெறும் பல்கலைக் கழகத்தில் ஏராளமான மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இதனிடையே விடுதியில் வைக்கப்பட்டிருந்த சட்னியில் எலி விழுந்து, வெளியேற முடியாமல் தவித்துக்கொண்டிருந்துள்ளது. இதனை விடுதி மாணவர் ஒருவர் விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
சட்னி வைக்கப்பட்டிருந்த பாத்திரம் மூடப்படாமல், இருந்ததால் எலி விழுந்ததாக மாணவர்கள் அந்த விடியோவுக்கு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
பல்கலைக் கழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் உணவின் தரம், மற்றும் பாதுகாப்பு குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதேபோன்று சம்பவம் சமீப காலமாக அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது.
மும்பையில் இணையத்தில் சைவ உணவு வாங்கியிருந்த ஒருவருக்கு, அதில் இறந்த நிலையில் எலி இருந்த சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரயில்களில் வழங்கப்படும் உணவுகளில் பிளேடு, ரயில் சமையலறையில் எலிகள் உலாவுவது, மும்பையில் மருத்துவர் ஒருவர் வாங்கியிருந்த ஐஸ்கிரீமில் விரல் இருந்தது என பல சம்பவங்கள் சமீபத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.