வந்தே மாதரம் பாடிய ஆஸ்திரிய கலைஞர்கள்: மோடி வெளியிட்ட விடியோ!
ஆஸ்திரியா நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணம்.
ஆஸ்திரிய நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் அந்நாட்டு கலைஞர்கள் வந்தே மாதரம் பாடலை பாடினர்.
மூன்று நாள்கள் பயணமாக ரஷியா மற்றும் ஆஸ்திரிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை சென்றார். ரஷியாவில் இரண்டு நாள் பயணத்தை முடித்துவிட்டு ஆஸ்திரிய நாட்டுக்கு புதன்கிழமை சென்றுள்ளார்.
அங்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், வியன்னாவில் வந்தே மாதரம் பாடலை இசையமைத்து அந்நாட்டு கலைஞர்கள் மோடி முன்னிலையில் பாடிக்காட்டினர்.
இந்த காணொலியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள மோடி, ஆஸ்திரியா துடிப்பான இசைக் கலாச்சாரத்துக்கு பெயர் பெற்றது. வந்தே மாதரத்தின் அற்புதமான ஒரு இசையமைப்பு கிடைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
சுமார் 41 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரிய நாட்டுக்கு இந்திய பிரதமர் ஒருவர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.