தெரியுமா சேதி...?
மம்தாவின் மாம்பழ பரிசு: ராகுல் காந்திக்கு இடமில்லை
தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கொல்கத்தாவிலிருந்து கூடை கூடையாக மாம்பழங்கள் வந்து இறங்கின. ஹிம்சாகர், லஸ்கிரா, மல்லிகா, அமர்பாலி உள்ளிட்ட மேற்கு வங்கத்தின் பெயர்பெற்ற மாம்பழங்கள் அடங்கிய அந்தக் கூடைகள் ஒவ்வொன்றும் பத்து கிலோ எடையுள்ளவை.
அவை அனைத்தும் "பங்க பவன்' என்று அறியப்படும் மேற்கு வங்க அரசினர் விடுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கிருந்து அவற்றை தனித்தனியாக அதிகாரிகள் காரில் எடுத்துச் சென்றனர். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா என்று முக்கியப் பிரமுகர்களுக்கும், அவர்களது வீட்டுக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சார்பில் அந்த மாம்பழங்கள் அதிகாரிகளால் நேரில் கொண்டுபோய் கொடுக்கப்பட்டன.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, உள்ளிட்டவர்களுக்கும் மாம்பழக் கூடைகள் முதல்வர் மம்தா பானர்ஜியின் சார்பில் வழங்கப்பட்டன. அந்தப் பட்டியலில் சோனியா காந்தியின் முகவரியான 10, ஜன்பத், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் முகவரியான 12, ஜன்பத் ஆகியவை மட்டுமல்லாமல், எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் வீடுகளும் இடம்பெற்றிருந்தன.
அரசியல் மனமாச்சரியங்களையும், தேர்தல் நேரப் பரப்புரைகளையும் ஒதுக்கி நிறுத்தி, ஆண்டுதோறும் இதுபோல மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற மாம்பழங்களை முக்கியமான தலைவர்களுக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் முதல்வர் மம்தா பானர்ஜி.
மம்தாவின் பட்டியலில் மேற்கு வங்க ஆளுநர் ஆனந்தபோஸ் இடம் பெற்றிருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடம்பெறவில்லை என்பது மட்டும் நிச்சயம். பெயர் விடுபட்டதா, இல்லை வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டதா?