பிகார் மாநிலத்தில் மான்யா மது காஷ்யப் என்பவர் அம்மாநிலத்தின் முதல் திருநங்கை உதவி ஆய்வாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
பிகார் மாநில காவல் உதவி ஆய்வாளர் போட்டித் தேர்வு இறுதி முடிவுகளை மாநில காவல் துறை உதவி ஆய்வாளர் சேவை ஆணையம் (பிபிஎஸ்எஸ்சி) செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) வெளியிட்டது.
உடல் திறன், கல்வித் தகுதி, வயது மற்றும் இடஒதுக்கீடு போன்ற தகுதிகளின் அடிப்படையில் 3,727 பேர் தேர்வுக்கு பரிசீலிக்கப்பட்டனர். இவர்களில் 1,275 பேர் இறுதி தகுதி பட்டியலில் இடம் பெற்றனர். இதில் ஒரு திருநங்கை, 2 திருநம்பிகள் வெற்றி பெற்றனர்.
இந்த தேர்வில் பிகார் மாநிலத்தின் பாகல்பூர் கிராமத்தைச் சேர்ந்த மான்யா மது காஷ்யாப் என்ற திருநங்கை வெற்றி பெற்று உதவி ஆய்வாளர் ஆகப் பொறுப்பேற்றுள்ளார்.
இது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர் கூறியதாவது, “நான் கடும் சோதனைகளை சந்தித்தேன். அவை தற்போது பலனளித்துள்ளது. கல்வி நிறுவன சூழல் சீரழியும் எனக் கூறி பல நிறுவனங்களில் என்னை நிராகரித்தார்கள். ஆனால் கல்வி கற்க வேண்டும் என ஆசையாக இருந்தது. அது எனக்கு எளிதில் கிடைக்கவில்லை. பின்னர் கடும் போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த கல்வி மூலமே என் வாழ்க்கை அழகான பக்கங்களாக மாறியது. என் குடும்பம் என்றுமே எனக்கு உறுதுணையாக இருந்தது. அதனால்தான் தற்போது இந்த இடத்தில் நான் இருக்கிறேன்’’ எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.