வியன்னா: இருநாடுகளுக்கும் இடையேயான உள்கட்டமைப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் இதர துறைகளில் கூட்டுறவு ஏற்படும் வகையில் ஆஸ்திரிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார.
ரஷியாவில் இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று பிரதமர் மோடி ஆஸ்திரிய தலைநகர் வியன்னா வந்தடைந்தார். கடந்த 41 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் ஆஸ்திரியா வந்திருப்பது இதுவே முதல்முறை.
பிரதமர் மோடியும், ஆஸ்திரிய தலைவர் கார்ல் நெஹாம்மரும், பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்த நிலையில், ஹஃப்பர்க் மாளிகையில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இருநாட்டு நிறுவனங்களும், உள்கட்டமைப்பு, மறுஆக்கம் செய்யக்கூடிய எரிசக்தி, பசுமைப் பரப்பு, புதிய தொழில்நுட்பங்கள், தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம் உள்ளிட்ட ஏராளமான துறைகளில் கூட்டாண்மையை மேற்கொள்ளும் திறன் பெற்றுள்ளன என்று இந்திய வெளியுறவு விவகாரத் துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு ஆஸ்திரிய நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கு இடையே புத்தாக்க தொழில்களுக்கான இணைப்பு நிகழ்ச்சி 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.