அமர்நாத்: 4,600 பேர் அடங்கிய 13வது குழு புறப்பட்டது!
அமர்நாத் யாத்திரையின் 13வது குழு இன்று காலை புறப்பட்டு சென்றுள்ளனர்.
கனமழைக்கு மத்தியில் வருடாந்திர அமர்நாத் யாத்திரையின் 13வது குழு இன்று காலை புறப்பட்டு சென்றுள்ளனர்.
இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஜூன் 29ம் தேதி தொடங்கியுள்ளது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர். இந்த நிலையில் 4,627 பேர் அடங்கிய பக்தர்கள் குழு இன்று காலை ஜம்முவில் இருந்து புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பால்டால் மற்றும் பஹல்காம் அடிப்படை முகாம்களுக்குச் சென்ற பக்தர்களின் 13வது குழு இதுவாகும்.
இதில் 2,773 பக்தர்கள் அடங்கிய குழு 95 வாகனங்களில் 48 கிமீ உள்ள பஹல்காம் பாதை வழியாகவும், 1,854 பக்தர்கள் 14 கிமீட்டரில் உள்ள பால்டால் வழியாக 90 வாகனங்களில் புறப்பட்டனர்.
52 நாள்கள் நடைபெறும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 19ஆம் தேதி நிறைவடைகிறது. கடந்தாண்டு 4.5 லட்சம் பக்தர்கள் குகைக் கோயிலைத் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.