முகப்பு
இந்தியா

ரீசி பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவிய செயலி? என்ஐஏ விசாரணையில் திடுக்கிடும் தகவல்

ரீசி பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவிய செயலி மற்றும் பயங்கரவாதிகளுக்கு உதவிய உள்ளூர் நபர்கள் குறித்து என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Updated On : 10 ஜூலை, 2024 at 9:52 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில், ரீசி மாவட்டத்தில் பக்தர்கள் வந்த பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பயங்கரவாதிகள் எவ்வாறு இந்த சதித்திட்டத்தை செய்தனர் என்பது குறித்த தகவல்கள் என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டிருக்கும் ஹக்கம் கானின் வீடு ரஜௌரியில் உள்ளது. இங்குதான் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் ஜூன் 1 முதல் 9ஆம் தேதி வரை தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 போ் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து தேசிய, மாநில புலனாய்வு முகமைகள் விசாரணையைத் தொடங்கி நடத்தி வருகின்றன.

இதில், பயங்கரவாதிகளின் உதவியாளராக இருந்த ஹக்கம் கான், எட்டு நாள்கள் பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம், உணவு கொடுத்து, தாக்குதல் நடத்துவதற்கான இடத்துக்கும் கூட்டிச்சென்றுள்ளார்.

ஜூன் 15ஆம் தேதி அவர் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டு மூன்று முறை விசாரணைக்குள்படுத்தப்பட்டார்.

தாக்குதலுக்கு முன்பு, ஜூன் 7ஆம் தேதி, மூன்று பயங்கரவாதிகளையும் ஹக்கம் அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தும் இடத்தைக் காட்டியிருக்கிறார். அது ஒரு வளைவுப்பாதை. எனவே, வாகனங்கள் மெதுவாகவே அங்கு வரும். அங்கிருந்து வெளியேறுவது எப்படி என்பதை ஸ்லீப்பர் செல் போன்ற பயங்கரவாதிகளுக்கு உதவும் உள்ளூர் நபர்கள் மூலம் தெரிந்துகொண்டுள்ளனர். குறிப்பாக பேருந்து மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட இடம் மேல் பகுதியிலிருந்து தாழ்வான சாலை அமையும் பகுதி. எனவே, தொலைவிலிருந்து பார்த்தால், அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாது. மிகச் சரியாக அவ்விடம் தாக்குதலுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த பக்தா்கள் குழு, ஜம்மு-காஷ்மீருக்கு ஆன்மிக பயணம் வந்தனா். ஜம்மு-காஷ்மீரின் ரீசி மாவட்டத்தில் உள்ள சிவ கோத்ரி ஆலயத்தில் இருந்து கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி ஆலயத்துக்கு ஒரு பேருந்தில் அவா்கள் இரவு சென்று கொண்டிருந்தனா்.

அப்போது வழியில் தெரியாத் என்ற கிராமம் அருகே சென்றுகொண்டிருந்த பேருந்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. அதில் 9 போ் உயிரிழந்தனா். 41 போ் பலத்த காயமடைந்தனா்.

தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள், ரஜௌரியில் உள்ள வனப்பகுதி வழியாகத்தப்பித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆல்பைன் வெஸ்ட் என்று கூறப்படும் மொபைல் செயலி மூலமாக, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ரஜௌரி, பூஞ்ச், கதுவாவில் வனப்பகுதி வழியாக ஊடுருவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →