ஜூன் 25 - அரசியலமைப்பு படுகொலை நாள்: மத்திய அரசு அறிவிப்பு
மத்திய அமைச்சர் அமித் ஷா எக்ஸ் பதிவு
இனிவரும் ஆண்டுகளில் ஜூன் 25ஆம் தேதியில் அவசரநிலை காலத்தில் பாதிக்கப்பட்டோர்க்கு அஞ்சலி செலுத்தப்படும் என்று அமித் ஷா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதியில் இந்தியாவில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து தற்போதுள்ள பிரதமர் மோடியிலான அரசு, இனிவரும் ஆண்டுகள்தோறும் ஜூன் 25ஆம் தேதியில் `சம்விதான் ஹாத்யா திவாஸ்’ என்ற பெயரில் அரசியலமைப்பு படுகொலை நாளாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
1975ஆம் ஆண்டில், அவசரநிலைக்கு எதிராக பலரும் போராட்டங்கள் செய்து உயிரிழந்தனர்; சிலர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும், அவசரகாலத்தில் மனிதாபிமானமற்ற வலிகளைத் தாங்கிய அனைவரின் மகத்தான பங்களிப்புகளின் நினைவாகவும் மற்றும் வருங்காலத்தில் இதுபோன்ற கடுமையான அதிகார துஷ்பிரயோகத்தை எந்த வகையிலும் ஆதரிக்க வேண்டாம் என்று இந்திய மக்களை மீண்டும் வலியுறுத்துவதற்கும் ஜூன் 25ஆம் தேதியில் `சம்விதான் ஹாத்யா திவாஸ்’ அனுசரிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த மக்களவைக் கூட்டத்தொடரில், அவசரநிலையின் போது உயிரிழந்தவர்களின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி, அவைத்தலைவர் ஓம் பிர்லா அவசரகாலக் காலத்தைக் கண்டித்து பேசியிருந்தார்.