அரசியலமைப்பு எங்களுக்குத் தாய்ப் போன்றது: பிரதமர் மோடிக்கு மமதா பதில்!
அரசியலமைப்பு எங்களுக்குத் தாய்ப் போன்றது என பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு மமதா பானர்ஜி பதில் கூறியது குறித்து...
அரசியலமைப்பு எங்களுக்குத் தாய்ப் போன்றது என பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு மமதா பானர்ஜி பதில் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் பழங்குடியின மக்களுக்கானச் சிறப்பு நிகழ்ச்சியொன்றில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை (மார்ச் 7) கலந்துகொண்டார்.
ஆனால், அந்த நிகழ்ச்சி ஏற்கெனவே திட்டமிட்ட பகுதியிலிருந்து வேறொரு பகுதிக்கு மாற்றப்பட்டது. இந்த நிகழ்வு அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறிய நிலையில், இடம் மாறியதால் பெரிதாகக் கூட்டம் கூடவில்லை என்று சொல்லப்படுகின்றது.
இதனிடையே, குடியரசுத் தலைவரின் வருகையின்போது, அவரை வரவேற்க மேற்கு வங்க முதல்வரான மமதா பானர்ஜியோ அல்லது அரசு சார்பில் எந்தவொரு அமைச்சரோ செல்லவில்லை என்றும் திரிணமூல் காங்கிரஸ் அரசு மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
முன்னதாக, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அரசு குடியரசுத் தலைரை மட்டுமல்ல; நாட்டையும் அரசியலமைப்பையும் அவமதித்துள்ளதாகப் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மமதா பேனர்ஜி, “குடியரசுத் தலைவரின் நிகழ்ச்சிகள் அனைத்தும் கிரீன் ரூம் ஏற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் பகுதி இந்திய விமான நிலைய ஆணையத்திற்குச் சொந்தமானப் பகுதி.
மேலும், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தனியார் ஏற்பாட்டாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. எதிர்பாராத விதமாக எது நிகழ்ந்தாலும் அது அவர்களுடைய தோல்வி. நாங்கள் குடியரசுத் தலைவருக்கும் அரசியலமைப்புக்கும் முழுமரியாதையைக் கொடுக்கின்றோம்.
ஏனென்றால், அரசியலமைப்பு எங்களுக்குத் தாய்ப் போன்றது. நாங்கள் அதை அவமதிக்கமாட்டோம். எங்கள் மீது எழும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தேர்தல் நோக்கங்களுக்கானவை.” எனத் தெரிவித்தார்.