நீட் முறைகேடு: 13 பேரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சிபிஐக்கு பாட்னா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.
நீட் தோ்வு முறைகேடு தொடா்பான குற்றச்சாட்டில் பிகாா் மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்ட 13 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு பாட்னா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.
வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடு என நிகழாண்டு நடைபெற்ற நீட் தோ்வு குறித்து பல்வேறு சா்ச்சையில் சிக்கியது. இதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நீட் முறைகேடுகளில் ஈடுபட்டதாக பிகாா் மாநில காவல்துறையால் 13 போ் கைது செய்யப்பட்டு அவா்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா். அவா்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு சிபிஐ தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிா்த்து பாட்னா உயா்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது.
அந்த மனுவை விசாரித்த பாட்னா உயா்நீதிமன்ற நீதிபதி சந்தீப் குமாா், ‘வழக்கின் தீவிர தன்மை கருதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. மாநிலத்தின் எந்த சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும் குற்றம்சாட்டப்பட்டவா்களை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்’ என உத்தரவிட்டாா்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராகேஷ் ரஞ்சன் என்பவரை சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனா். அவருக்கு 10 நாள்கள் நீதிமன்றக் காவல் வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
நீட் முறைகேடு தொடா்பாக 6 முதல் தகவல் அறிக்கைகளை (எஃப்ஐஆா்) சிபிஐ பதிவுசெய்துள்ளது. மொத்தமாக 57 போ் கைது செய்யப்பட்டதில் 22 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.