பாஜகவின் தவறான கொள்கையால் ராணுவ வீரர்கள் பாதிப்பு: ராகுல் காந்தி
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் 4 வீரர்கள் பலியான சம்பவம்.
பாஜகவின் தவறான கொள்கையால் ராணுவ வீரர்களும் அவர்களது குடும்பங்களும் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் நேற்றிரவு நடைபெற்ற பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ அதிகாரி ஒருவர் உள்பட 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு ராணுவ வீரர் காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் ராகுல் காந்தி தெரிவித்திருப்பதாவது:
ஜம்மு - காஷ்மீரில் இன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் மீண்டும் நமது ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பயங்கரவாதிகளின் தாக்குதல் மீண்டும் மீண்டும் நடைபெறுவது மிகுந்த வருத்தமும், கவலையும் அளிக்கிறது. இந்த தொடர் தாக்குதல்கள் ஜம்மு - காஷ்மீரின் மோசமான நிலையை வெளிப்படுத்துகின்றன.
நமது ராணுவ வீரர்களும் அவர்களின் குடும்பங்களும் பாஜகவின் தவறான கொள்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
நாட்டுக்கும் ராணுவ வீரர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தேசபக்தியுள்ள ஒவ்வொரு இந்தியரின் கோரிக்கையாக உள்ளது. இந்த துயரமான நேரத்தில் பயங்கரவாதத்துக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.