தேர்வு மையங்கள்வாரியாக நீட் முடிவுகளை வெளியிடுக: உச்ச நீதிமன்றம்
தேர்வு மையங்கள் வாரியாக நீட் முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையங்கள்வாரியாக வெளியிட வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், ஜூலை 20ஆம் தேதி பகல் 12 மணிக்குள் நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மைய நகரங்கள் மற்றும் தேர்வு மையங்கள்வாரியாக வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் முழுமையாகத் தெரியாததால் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். தேர்வு நடைபெற்ற நகரம் மற்றும் தேர்வு மையங்கள்வாரியாக தேர்வு முடிவுகள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள முடியும். தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்ற உத்தரவை மாற்றக் கோரிய மத்திய அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்கள்வாரியாக மதிப்பெண் விவரங்கள் மட்டும் வெளியிடப்பட வேண்டும், மாணவர்களின் அடையாளம் வெளியிடப்படக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்குகள் இன்று காலையில் விசாரணைக்கு வந்த போது, வினாத்தாள் கசிவால் ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே தேர்வை ரத்து செய்ய முடியும் என்றும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல், அனைத்து மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது.
இதற்கு, மனுதாரர் தரப்பில், நீட் தேர்வு எழுதிய 23 லட்சம் மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று கோரவில்லை, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 1.08 லட்சம் மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்துவதாகவும், நீட் தேர்வு முறைகேடு குறித்து சென்னை ஐஐடி சமர்ப்பித்த அறிக்கையை ஏற்க வேண்டாம் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.