முகப்பு
இந்தியா

தில்லிக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி தேவை: அதிஷி

தலைநகர் தில்லியை மாற்றாந்தாய் போல் நடத்துகிறது மத்திய அரசு..

Updated On : 19 ஜூலை, 2024 at 10:30 AM
அமைச்சர் அதிஷி - Center-Center-Delhi
பகிர்:

தலைநகரில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என நிதியமைச்சர் அதிஷி வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்களுடனான சந்திப்பில் பேசிய அவர்,

மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, சாலை, போக்குவரத்து, மின்சாரத் துறைகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நகரத்தை அழகுபடுத்துவதற்குச் செலவழிக்க அதிகப் பணத்தை விடுவிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதிக வருமான வரி செலுத்துபவர்கள் தில்லி மக்கள். தில்லி நகர மக்கள் வருமான வரியாகச் செலுத்தும் ரூ.2.07 லட்சம் கோடியிலிருந்து ரூ.10 ஆயிரம் கோடி பெற வேண்டும். இந்த 10 ஆயிரம் கோடி என்பது மத்திய அரசின் பட்ஜெட்டில் வெறும் 0.25 சதவீதம், தில்லி மக்களின் வருமான வரியில் 5 சதவீதம் மட்டுமே.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 22-ம் தேதி தொடங்குகிறது. ஜூலை 23ல் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

மும்பையிலிருந்து மத்திய அரசு ரூ.5 லட்சம் கோடி வரியாகப் பெறுகிறது என்றும், அதற்கு ஈடாக ரூ.54,000 கோடி மகாராஷ்டிர அரசுக்கு மத்திய அரசால் வழங்கப்படுகிறது என்று அதிஷி கூறினார்.

தில்லியைப் போலவே பெங்களூருவும் ரூ.2 லட்சம் கோடி வரியாக வழங்குகின்றன. மேலும் மத்திய அரசு அதன் வரி தொகுப்பிலிருந்து ரூ.33 ஆயிரம் கோடி வழங்குகிறது.

2001ஆம் ஆண்டு முதல் தில்லி அரசுக்கு மத்திய அரசு வரி விதிப்பிலிருந்து ரூ.325 கோடி மட்டுமே செலுத்திவந்தது. இருப்பினும், இந்த கட்டணம் கடந்தாண்டு நிறுத்தப்பட்டது. தற்போது தேசிய தலைநகருக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை.

24 மணி நேர இலவச மின்சாரம், மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை, சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் கட்டுதல் மற்றும் பராமரித்தல் போன்ற வசதிகளை வழங்குவதற்காக கடந்தாண்டு தில்லி அரசுக்கு நகர மக்கள் ரூ.35 ஆயிரம் கோடியை வரியாகச் செலுத்தியுள்ளனர்.

தில்லியை மாற்றாந்தாய் போல் நடத்துவதாகவும் குற்றம் சாட்டி அவர், தில்லி மக்கள் மத்திய அரசுக்கு அளித்த ரூ.2.32 லட்சம் கோடியில் ஒரு ரூபாய் கூட தில்லிக்காகச் செலவிடவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையில், தில்லி பாஜக செயலாளர் ஹரிஷ் குரானா இந்த விவகாரத்தில் நிதியமைச்சர் பொய் கூறுவதாகவும் குற்றம் சாட்டினார். தில்லி அரசுக்கு 2015ல் மத்திய அரசு ரூ.4,258 கோடி வழங்கியது, 2022ல் ரூ.11,945 கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.