முகப்பு
இந்தியா

ரூ.60 கோடி மோசடி செய்த ரியல் எஸ்டேட் உரிமையாளர்!

கட்டுமானப் பணிகள் தொடங்காமல் இருந்ததால் பணம் செலுத்தியவர்கள் ஆத்திரம்

Updated On : 19 ஜூலை, 2024 at 6:55 AM
சித்தரிக்கப்பட்ட படம்
பகிர்:

தெலங்கானாவில் குறைந்த விலையில் வில்லாக்கள் தருவதாகக் கூறி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

தெலங்கானாவின் ஹைதராபாத்தில் 50 வயதான குண்டுபள்ளி ஸ்ரீனிவாச ராவ் என்பவர் ஜி.எஸ்.ஆர். இன்ஃப்ரா குரூப் பிரைவேட் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். இவரும், இவருடன் சேர்ந்த வேறு இருவரும் சேர்ந்து குடியிருப்பு வில்லாக்களை குறைந்த விலையில் விற்பதாகக் கூறி விளம்பரம் செய்திருந்தனர்.

விளம்பரத்தினை நம்பிய சிலர், அந்த நிறுவனத்துடன் பதிவு செய்யப்படாத சில ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, 32 பேர் சுமார் ரூ.60 கோடியை வங்கி பரிவர்த்தனைகள் மூலமாகவும் மற்றும் பணமாகவும் செலுத்தியுள்ளனர்.

மூன்று ஆண்டுகளுக்குள் வில்லாக்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்; இல்லையெனில், பணம் செலுத்தியவர்களின் முழுப் பணத்தையும் 24% வட்டியுடன் திருப்பி அளிப்பதாகவும் வாக்குறுதியில் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் ஸ்ரீனிவாச ராவ் வாக்குறுதியை நிறைவேற்றாததால், காவல்நிலையத்தில் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீனிவாச ராவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வில்லாக்கள் கட்டப்பட இருந்ததாகக் கூறப்படும் நிலமானது சட்ட சிக்கலில் இருப்பதாகவும், இன்னும் கட்டுமானப் பணிகள் கூட தொடங்கவில்லை என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து, ஸ்ரீனிவாச ராவ் மீது மோசடி தொடர்பான புகார்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.