வங்கதேச வன்முறை: எஸ். ஜெய்சங்கரிடம் கோரிக்கை விடுத்த மெகபூபா முப்தி
வங்கதேசத்தில் போராட்டம் வெடித்துள்ள நிலையில் காஷ்மீர் மாணவர்களுக்காக மெகபூபா முப்தி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
வங்கதேசத்தில் உள்ள காஷ்மீரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், " வங்கதேசத்தில் போராட்டம் வெடித்துள்ள நிலையில் அங்குள்ள ஆயிரக்கணக்கான காஷ்மீரி மாணவர்களின் பாதுகாப்பை தலையிட்டு உறுதிப்படுத்துமாறு ஜெய்சங்கரை நான் கேட்டுக்கொள்கிறேன்.
இணையதளச் சேவைகள் முடக்கப்பட்டிருப்பது அவர்களின் பெற்றோரின் துயரத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. அவர்களைத் திரும்ப இந்தியா அழைத்து வர உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே வங்கதேசத்தில் இடஒதுக்கீடு முறைக்கு எதிரான மாணவா்கள் போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து அந்நாட்டில் உள்ள இந்தியா்கள் வெளியே செல்வதைத் தவிா்க்குமாறு இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டது.
வங்கதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,000 அரசுப் பணிகளுக்கு 4,00,000 பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர்.
இதில், 1971-ஆம் ஆண்டு விடுதலைப் போரில் பங்கேற்ற வீரர்களின் வம்சாவழியினருக்கு 30 சதவீதமும், பின்தங்கிய மாவட்டங்களுக்கும், பெண்களுக்கும் தலா 10 சதவீதமும், சிறுபான்மை இனத்தவருக்கு 5 சதவீதமும் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 1 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், நாட்டின் உயர்நிலை அரசுப் பணிகளுக்கு தகுதியுள்ள மாணவர்கள் பணியமர்த்தப்படுவதை தற்போதுள்ள இந்த இட ஒதுக்கீட்டு முறை தடுப்பதாகவும், இட ஒதுக்கீட்டில் சீர்திருத்தங்கள் கோரியும் மாணவர்கள் நடத்தி வந்த நாடு தழுவிய போராட்டத்தில் திங்கள்கிழமை வன்முறை வெடித்தது.
அமைதியாக நடத்தப்பட்ட போராட்டத்தின் மீது நாட்டில் ஆளும் அவாமி கட்சியின் மாணவர் அணி காவல்துறை உதவியுடன் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து வெடித்த வன்முறையில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.