ஜார்க்கண்ட் தேர்தலில் வெற்றி பெற வங்கதேசத்தினருக்கு அடைக்கலம்: பாஜக
குடியேற்றமும் குடியுரிமையும் குறித்து முடிவு எடுக்க வேண்டியது மத்திய அரசு. மாநில அரசுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது யார்?
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வங்கதேசத்தினருக்கு சட்டவிரோதமாக அடைக்கலம் அளிக்கிறது இந்தியா கூட்டணி என பாஜக இன்று (ஜூலை 21) விமர்சித்தது.
அரசுப் பணிகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்கும் இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசத்தில் கலவரம் நடைபெற்று வருகிறது. இதனால், அங்கிருந்து புலம்பெயர்ந்து வருபவர்களை மேற்கு வங்க அரசு வரவேற்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (ஜூலை 21) தெரிவித்திருந்தார்.
வங்கதேசத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு காரணமாக ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடியின் மீது, தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் அகதிகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தை மம்தா மேற்கோள் காட்டினார்.
இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க மாநில பாஜக துணை பொறுப்பாளர் அமித் மாளவியா,
வங்கதேசத்தில் இருந்து வருபவர்களை மேற்கு வங்கம் முதல் ஜார்க்கண்ட் வரை தங்க அடைக்கலம் கொடுப்பது, அடைக்கலம் தேடி வரும் யாரையும் வரவேற்கும் உரிமையை மம்தா பானர்ஜிக்கு வழங்கியது யார்? குடியேற்றமும் குடியுரிமையும் குறித்து முடிவு எடுக்க வேண்டியது மத்திய அரசு. மாநில அரசுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது யார்?
இது இந்தியா கூட்டணியின் தீயத் திட்டங்களில் ஒன்று. புலம்பெயர்ந்து வருவோருக்கு அவர்கள் அடைக்கலம் கொடுப்பதால், ஜார்க்கண்ட் தேர்தலில் வெற்றி பெறுவோம் என நினைக்கின்றனர்.
மதரீதியான துன்புறுத்தல்களுக்குள்ளாக்கப்பட்டு இந்தியாவுக்கு வரும் ஹிந்து அகதிகளை அனுமதிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு மம்தா எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் தற்போது வங்கதேசத்தினரை இந்தியாவுக்கு வரவேற்கிறார் என மாளவியா குறிப்பிட்டார்.