காட்டுப்பகுதியில் உணவில்லாமல் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த பெண்!
மனரீதியான பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை போலிஸார் தேடி வருகின்றனர்
மகாராஷ்டிரத்தின் காட்டுப்பகுதியில் பெண் ஒருவர் மரத்தில் கட்டப்பட்ட நிலையில், உணிவில்லாமல் தவித்து வந்துள்ளார்.
மகாராஷ்டிரத்தின் சோனூர்லி கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதி வழியாக சென்ற மேய்ப்பர் ஒருவர், பெண் ஒருவரின் சத்தம் கேட்டு, அந்த பகுதி நோக்கிச் சென்றுள்ளார். அங்கு 50 வயதான பெண் ஒருவர் மரத்தில் சங்கிலியால் கட்டப்பட்டு, அவதிப்படுவதைக் கண்டு, காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக, சிந்துதுர்க்கின் ஓரோஸ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் வைத்திருந்த பையில், அவரின் பெயர் லலிதா கயி என்பது தெரியவந்தது. மேலும், அந்தப் பையில் அமெரிக்கா செல்ல பாஸ்போர்ட் இருந்ததும், அதில் தமிழ்நாட்டு முகவரி இருப்பதையும் கண்டறிந்தனர். இதனிருந்து, லலிதா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் கண்டறியப்பட்டது.
மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் லலிதா கடந்த சில தினங்களாக உணவு உண்ணாமல் இருப்பதும், அவருக்கு மனரீதியான பிரச்னை இருப்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, லலிதாவிடம் கையெழுத்து பூர்வமான விசாரணை மேற்கொண்டதில், அவர் 40 நாள்களாக உணவு உண்ணாமல் இருக்கிறார் என்றும், அவரது கணவருடன் ஏற்பட்ட தகராறில் தான், அவர் லலிதாவை மரத்தில் கட்டிவைத்து சென்றுள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, லலிதாவின் குடும்பத்தினரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தமிழ்நாட்டில் தேடி வருகின்றனர்.