கேரளத்தில் பெய்து வரும் அதி கனமழையையடுத்து, அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்தது, பல பகுதிகளில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்து வருகின்றது. வட மாவட்டங்களான வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் இடைவிடாத மழை மற்றும் பலத்த காற்று வீசியது. வயநாடு முண்டக்கை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கனமழையைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள புதுமலையில் பல குடும்பங்கள் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், கோழிக்கோடு மாவட்டத்தில் பலத்த காற்று வீசியதால் அதிகளவில் சேதம் ஏற்பட்டது.
திங்கள்கிழமை அதிகாலையில் தாமரச்சேரி மற்றும் அம்பயத்தோடு பகுதிகளில் திடீரென வீசிய காற்றில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன, பல வீடுகள் சேதமடைந்தன. பலத்த காற்றில் மரங்கள் வேரோடு சாய்ந்த நிலையில், அப்பகுதியில் உள்ள ஏழு வீடுகள் சேதமடைந்தன.
மின்சார விநியோகமும் பரவலாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருச்சூரில் உள்ள பத்தழகுண்ட் அணை மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள பேப்பாறை மற்றும் அருவிக்கரா அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் உபரி நீர் திறக்கப்படும் என அந்தந்த மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை மற்றும் மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
மாநிலத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், மணிக்கு 40 கிமீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.