முகப்பு
இந்தியா

பிரசாரத்துக்கு மோடி செல்லாத மாநிலங்கள்!

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு ஒருமுறை கூட செல்லாத பிரதமர்.

Updated On : 1 ஜூன் 2024, 4:05 pm IST
பகிர்:

பாஜக ஆளும் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுராவை தவிர்த்து, மணிப்பூர், நாகாலாந்து, மிஸோரம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் எந்தவொரு பிரசாரப் பொதுக் கூட்டங்களிலும் கலந்துகொள்வதை தவிர்த்துவிட்டார் பிரதமர் மோடி.

வடகிழக்கு மாநிலங்களில் அஸ்ஸாம், திரிபுரா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் நான்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி செய்கிறது. மேலும், நாகாலாந்து, மேகாலயாவில் ஆளுங்கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்குபெற்றுள்ளது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட மார்ச் 16-ஆம் தேதியிலிருந்து, பிரசாரப் பொதுக் கூட்டங்கள், வாகனப் பேரணிகள் உள்பட மொத்தம் 206 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு ஒருமுறை கூட செல்லவில்லை.

Advertisement

அதேபோல, நாகாலாந்து, மிஸோரம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும் அவர் பிரசாரப் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை.

ஏப்ரல் 17 ஆம் தேதி அன்று, தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி நல்பாரி (அஸ்ஸாம்), அகர்தலா (திரிபுரா) ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டங்களில் பங்கேற்றார்.

விதிவிலக்காக, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்பு, மார்ச் 9-ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகரில் நடைபெற்ற வாகனப் பேரணியில் மட்டும் பங்கேற்றார் பிரதமர் மோடி.

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வடகிழக்கு மாநிலங்களில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 19 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.