சரணடைவதற்கு முன்பு காந்திக்கு மரியாதை, அனுமன் கோயிலில் தரிசனம்!
ரோஸ் அவென்யூ சாலையில் உள்ள அனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திகார் சிறையில் சரணடைவதற்கு முன்பாக ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து ரோஸ் அவென்யூ சாலையில் உள்ள அனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
தில்லி மதுபான (கலால்) கொள்கை ஊழல் தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்ட வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
மக்களவைத் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்பதற்காக கேஜரிவாலுக்கு ஜூன் 1-ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
அவருக்கான ஜாமீன் அவகாசம் முடிந்ததால், ஜுன் 2ஆம் தேதி திகார் சிறையில் சரணடைய உள்ளதாக விடியோ மூலம் தெரிவித்திருந்தார். சிறையில் இருந்தாலும் தில்லி மக்களுக்கான பணிகளை தொடர்ந்து மேற்கொள்வேன் எனவும் அந்த விடியோவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், திகார் சிறையில் இன்று சரண் அடைவதற்கு முன்பாக தில்லி ராஜ்காட் திடலில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் அஞ்சலி செலுத்தினார். |
பின்னர் ரோஸ் அவென்யூ சாலையில் உள்ள அனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். முதல்வர் கேஜரிவாலுடன் அவரின் மனைவி சுனிதா கேஜரிவால், தில்லி அமைச்சர்கள் அதிஷி, கைலாஷ் கெலாட், செளரப் பரத்வாஜ், மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், சந்தீப் பதாக், துர்கேஷ் பதாக், ராக்கி பிர்லா, ரீணா குப்தா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.