புணே: தீ விபத்தில் காவலாளி பலி
புணேவில் 5 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காவலாளி பலியானார்.
புணேவில் 5 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காவலாளி ஒருவர் பலியானார். மேலும், 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மகாராஷ்டிரத்தின் புணேவிலுள்ள ஷானிபார் பகுதியில் ஐந்து மாடி கட்டடத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் காவலாளி ஒருவர் பலியான நிலையில் 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தலைமை தீயணைப்பு அதிகாரி தேவேந்திர போட்போட் கூறுகையில்,”இந்த சம்பவம் நள்ளிரவு 1.30 மணியளவில் நடந்துள்ளது. கட்டடத்தின் இரண்டாவது மாடியிலுள்ள விடுதியில் வசித்த 42 மாணவிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
ஐந்து மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்ததன் பேரில் எங்கள் குழு அந்த இடத்தை அடைந்தது. பிறகு, தரை தளத்தில் உள்ள ஒரு கணக்கியல் அகாதமியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
தரைத்தளத்தில் தீயை அணைக்கும் போது, தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட 40 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் அங்கு இறந்து கிடந்தார். அவரை காவல்துறையினர் மீட்டு சசூன் பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் அந்த கட்டடத்தின் வேலைபார்த்து வந்த காவலாளி என்பது தெரியவந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை” என்றார்.