ஜூன் 10 வரை ட்ரோன்கள் பறக்கத் தடை: தில்லி காவல்துறை
பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு பலத்த பாதுகாப்பு
இந்தியாஜூன் 10 வரை ட்ரோன்கள் பறக்கத் தடை: தில்லி காவல்துறை
பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு பலத்த பாதுகாப்பு
பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவின் காரணமாக ஜூன் 10 வரையிலான இரண்டு நாள்களுக்கு ட்ரோன் போன்ற வான்வழி சாதனங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை (ஜூன் 9) நடைபெறவுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தில்லி காவல்துறையின் எக்ஸ் பக்கத்தில், 09.06.2024 முதல், பாரா-கிளைடர்கள், பாரா மோட்டார்கள், ஹேங் கிளைடர்கள், ஆளில்லா விமானங்கள், மைக்ரோலைட் விமானங்கள், ரிமோட் பைலட் விமானங்கள், ஹாட் ஏர் பலூன்கள், சிறிய அளவிலான விமானங்கள் போன்றவை வான்வழி தளங்களில் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு 10.06.2024 வரை அமலில் இருக்கும். உத்தரவை மீறினால், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188ன் கீழ் தண்டனை விதிக்கப்படும் என்ற தகவலுடன் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், தில்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, ”பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவின்போது தில்லி முழுவதும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். துணை ராணுவ வீரர்கள், தேசிய பாதுகாப்புப் படைவீரர்கள் பல அடுக்கு பாதுகாப்புடன் குடியரசுத் தலைவர் மாளிகையைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ள சார்க் (பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம்) நாடுகளின் பிரமுகர்களின் வருகையினால், மேற்கொள்ளப்படவிருக்கும் பாதுகாப்பானது கடந்தாண்டு ஜி20 உச்சிமாநாட்டின் போது மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பைப் போலவே இருக்கும்” என்று தகவல் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) பதவியேற்கவுள்ளார். குடியரசுத் தலைவா் மாளிகையில் இரவு 7.15 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறவிருக்கிறது. இத்தகவலை குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்டுள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும், பிரமுகர்களும் மற்றும் சார்க் (பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம்) நாடுகளின் பிரமுகர்களும் வருகைதர உள்ளனர்.