மும்பையில் பலத்த மழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மும்பையில் பெய்த பலத்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மும்பை: மும்பையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று ஞாயிறன்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில்தான் ஞாயிற்றுக்கிழமை இரவு மும்பையில் பலத்த மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது, சாலைகளில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
இன்றைய நிலவரப்படி, ரத்னகிரி, ராய்காட், பீட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தென்மேற்கு பருவமழை அடுத்த 2-3 நாள்களில் மத்திய அரபிக் கடல், மகாராஷ்டிரத்தின் சில பகுதிகள் (மும்பை மற்றும் சில பகுதிகள்) மற்றும் தெலங்கானாவில் தீவிரமடைவதற்கு சாதகமான சூழ்நிலை இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு பருவமழை இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே துவங்கியது, வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும். இந்த ஆண்டு கேரளத்தில் பரவலாக பருவமழை தொடங்குவதற்கு முன்பே, பலத்த மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.