நீரில் மூழ்கி 3 சிறுமிகள் பலி
குஜராத்தில் கிணற்றில் மூழ்கி 3 சிறுமிகள் பலி
குஜராத்தில் கிணற்றில் மூழ்கி, 3 சிறுமிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் வசித்து வந்த மூன்று சிறுமிகள் கீர்த்தி (5), சரஸ்வதி (10) மற்றும் லலிதா (12) காட்டுப்பகுதி அருகே கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இதற்கிடையில், சிறுமிகள் நள்ளிரவு வரை வீடு திரும்பாததால், அவர்களது குடும்பத்தினர் சிறுமிகளைத் தேடியுள்ளனர். பின்னர் சிறுமிகள் மூவரும் இறந்தநிலையில் கிணற்றில் கிடப்பதைக் கண்டு, அதிர்ச்சியுற்று, காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமிகளின் உடல்களைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
காவல்துறையினர் தெரிவித்ததாவது, சிறுமிகளில் ஒருவர் தண்ணீர் குடிப்பதற்காக கிணற்றின் அருகே சென்றுள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி, கிணற்றினுள்ளே விழுந்துள்ளார். அச்சிறுமியைக் காப்பாற்றுவதற்காக மற்ற இரு சிறுமிகளும் கிணற்றின் அருகே வந்துள்ளனர். ஆனால், அவர்களும் நிலைதடுமாறி கிணற்றினுள்ளே விழுந்துள்ளனர் எனக் கூறியுள்ளனர்.
சிறுமிகளின் மரணம், தற்செயலான விபத்து எனும் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.