குஜராத்தில் கரை ஒதுங்கிய ரூ.62 கோடி கஞ்சா!
கடந்த 10 நாட்களில் மட்டும் குஜராத்தில் ரூ.62 கோடி மதிப்புள்ள கஞ்சா கரை ஒதுங்கியுள்ளது.
குஜராத்தில் உள்ள தேவபூமி துவாரகா மாவட்டத்தின் கடற்கரையில் கடந்த 10 நாட்களில் மட்டும் 62 கோடி ரூபாய் மதிப்பிலான சரஸ் என்னும் 115 கஞ்சா பொட்டலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடலோரப் பகுதிகளில் கைவிடப்பட்ட போதைப்பொருள்களை கண்டறிந்து, கடத்தல்காரர்களால் நடுக்கடலில் வீசப்பட்ட, கரை ஒதுங்கிய போதைப் பாக்கெட்டுகளை தேடும் நடவடிக்கையை துவாரகா மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
ட்ரோன் வைத்து நடந்த தேடுதல் வேட்டையில், ஜூன் 7 ஆம் தேதி ஜாவர்நகர் அருகே 16 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கஞ்சா பொட்டலங்கள் காவல்துறையினர் மீட்டெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொஜாப் மற்றும் சிவராஜ்பூர் கிராமங்களுக்கு இடையில் ஜூன் 10 ஆம் தேதி 10 கஞ்சா பொட்டலங்கள் மீட்கப்பட்டன.
சந்திரபாகா, வச்சு மற்றும் கோரிஜ் கிராமங்களுக்கு அருகிலுள்ள வெவ்வேறு இடங்களில் ஜூன் 15 அன்று 64 கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதன் மூலம் கடந்த 10 நாட்களில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்ட மொத்த கஞ்சா பாக்கெட்டுகளின் எண்ணிக்கை 115-யை எட்டியுள்ளது.
தடயவியல் பரிசோதனையில் கடத்தப்பட்ட பொருள் 123.72 கிலோ எடையுள்ள சரஸ் என்னும் கஞ்சா என்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் மொத்த மதிப்பு ரூ.61.68 கோடி எனத் தெரியவந்துள்ளது.