நாட்டிலேயே கடல்மீது கட்டப்பட்ட மிக நீண்ட பாலம் என பெருமையோடு, கடந்த ஜனவரி மாதம், பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்ட அடல் சேது பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மிக நீண்ட கடல் பாலத்தின் அணுகு சாலை முதலே விரிசல் தென்படுவதாகவும், பாலத்தின் கட்டுமானப் பணிகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியிருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
நாட்டை மற்றும் மாநிலத்தை ஆளும் அரசுகள் இணைந்து நடத்திய ஊழலால்தான் இப்படி நடந்திருப்பதாக மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது.
அடல் சேது பாலத்தை, கடந்த ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மக்கள் பயன்பாட்டுக்காகத்திறந்து வைத்தார். 21.8 கிலோ மீட்டர் நீண்ட பாலமானது, ரூ.17,843 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது.
அடல் சேது பாலம் திறக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள், அணுகு சாலை முதல் விரிசல் ஏற்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல், விரிசல் ஏற்பட்ட இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகாராஷ்டிர அரசு தனது கஜானாவை நிரப்பிக்கொள்ள இதுபோன்ற ஊழல்களில் ஈடுபடுகிறது. இந்த பாலத்துக்கு முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாயின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அவரது பெயரால் இந்த அரசு ஊழல் செய்வது துரதிருஷ்டவசமானது. ஊழலின் தலைவர் பிரதமர் மோடி என்றும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.
அணுகுசாலை முதல் விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், அந்தச் சாலை ஒரு அடி அளவுக்கு இறங்கிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
விரிசல் ஏற்பட்டிருப்பது குறித்து மும்பை மாநகராட்சி மண்டல மேம்பாட்டுக் கழகம் கூறுகையில், கட்டமைப்பில் எந்த விரிசலும் ஏற்படவில்லை. ஜூன் 20ஆம் தேதி ஆய்வு செய்த போது சாலையில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது. அது மிகவும் சிறிய விரிசல்தான், அதுவும் சாலையின் ஓரத்தில் ஏற்பட்டுள்ளது. அதனை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது எனறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.