புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி
புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக கட்சிகள் வேகத் தடையாக இருந்தன என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக கட்சிகள் வேகத் தடையாக இருந்தன என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் ரூ.1,571 கோடியில் 74 திட்டங்களுக்கு பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை நாட்டினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேல் பரிசளித்தார். அப்போது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என பிரதமர் முன்பு மேடையிலேயே முதல்வர் ரங்கசாமி கோரிக்கை வைத்தார்.தொடர்ந்து, புதுச்சேரியை தனி மாநிலமாக மாற்றும் கோரிக்கையை கடிதமாக பிரதமர் மோடியிடம் முதல்வர் ரங்கசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, புதுச்சேரி சித்தர்கள், கவிஞர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி. மகாகவி பாரதியார், அரவிந்தர், அன்னை ஆகியோர் வாழ்ந்த ஆன்மிக பூமி புதுச்சேரி.
வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலாவில் உறுதியளித்தபடி புதுச்சேரியை முன்னேற்றியுள்ளோம். வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா ஆகியவற்றை உள்ளடக்கிய பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவோம். இரட்டை என்ஜின் அரசால் புதுச்சேரியின் வளர்ச்சி மேலும் வேகம் பெறும். மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதற்கு புதுச்சேரியே உதாரணம். புதுச்சேரியில் சுற்றுச்சூழல் மாசை குறைப்பதில் மின் வாகனங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. மக்கள் நலத் திட்டங்கள், குடிநீர், சுகாதார வசதிகள், கடற்கரை மேம்பாட்டை தொடங்கி வைத்துள்ளோம். காரைக்காலில் தொடங்கப்பட்ட அப்துல்கலாம் மையம், விடுதிகள் போன்றவை கல்வி வளர்ச்சியில் பங்காற்றும்.
புதுச்சேரி இரட்டை என்ஜின் அரசு இளைஞர்களின் கனவுகளை நனவாக்குகிறது. மாநில அரசின் முயற்சிகள் மக்களின் வாழ்க்கையை வளமானதாக மாற்றி வருகின்றன. புதுச்சேரி பல்கலை.யில் வசதிகள் செய்யப்பட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்கிறோம். புதுச்சேரி மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை வழங்க செயல்பட்டு கொண்டிருக்கிறோம். கிராமப்புற, நகர்ப்புற சாலை வசதி மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முந்தைய காங்கிரஸ், திமுக கூட்டணி அரசால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். ஊழல் பெருகி, குற்றங்களால் புதுச்சேரி மக்கள் பாதிக்கப்பட்டனர். புதுச்சேரியை ஒரு ஏடிஎம் போலவே காங்கிரஸ் கட்சி கருதி வந்தது. புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது ரேஷன் கடைகளில் அரிசிகூட இல்லை. புதுச்சேரியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. புதுச்சேரி வளர்ச்சிக்கு இரு கட்சிகளும் வேகத் தடையாக இருந்தன. காங்கிரஸ், திமுக ஆட்சி எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். ஊழல் மிகுந்த இரு கட்சிகளும் மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கின்றன. மக்கள் அதை விரும்பவில்லை.
வார இறுதியில் புதுச்சேரிக்கு மக்கள் வருவதன் மூலம் இந்த நகரம் வசந்த பூமியாக வருகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.