மாநில நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை
ஜிஎஸ்டி கவுன்சிலின் 53வது ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.
அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(ஜூன் 22) ஆலோசனை நடத்தினார்.
2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், நிதிநிலை அறிக்கை தொடர்பாக மாநில அரசுகளின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் கேட்டறிந்தார்.
மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுக்கொண்ட பின் அவரது தலைமையில் மாநில நிதியமைச்சர்களுடன் நடைபெறும் முதல் ஆலோசனை கூட்டம் இதுவாகும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டார். இந்த கூட்டத்தை தொடர்ந்து, ஜிஎஸ்டி கவுன்சிலின் 53வது ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.
முன்னதாக கடந்த 19-ஆம் தேதி பொருளாதாரா நிபுணர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.