துவாரகாவில் தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!
துவராகாவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துவாரகாவின் பிரேம் நகர்ப் பகுதியில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக தில்லி தீயணைப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
தீ விபத்து குறித்து அதிகாலை 3.30 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
முதற்கட்ட விசாரணையின்படி இன்வெர்ட்டரால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயானது இரண்டு மாடிக் கட்டடத்தின் முதல் தளத்திற்கும் பரவியது. அப்போது வீட்டில் தூக்கிக்கொண்டிருந்த நான்கு பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
Advertisement
இறந்தவர்கள் ஹீரா சிங் கக்கர் (48), அவரது மனைவி நீது (40) மற்றும் அவர்களது மகன்கள் ராபின் (22), லக்ஷய் (21) என அடையாளம் காணப்பட்டனர்.
வீட்டின் வெளிக்கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து, குடும்ப உறுப்பினர்களை மீட்டு, ராவ் துலாரம் நினைவு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
ஹீரா சிங் கக்கரின் தாயார் சீதா தேவி கட்டடத்தின் தரை தளத்தில் தூங்கிக் கொண்டிருந்தார், அவர் காயமின்றி இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
சில நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டது . உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகப் பிணவறைக்கு மாற்றப்பட்டன.
தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.