மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி!
மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குகி இனத்தவர் ஆதிக்கம் செலுத்தும் யாவோலன் கிராமத்திற்கு அருகே சனிக்கிழமை மதியம் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இம்பாலில் இருந்து உக்ருல் நோக்கிச் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் வாகனங்கள் மீது சந்தேகப்படும்படியான தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவரின் தலையில் குண்டு பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அதே நேரத்தில் துப்பாக்கிக் காயங்களுடன் சிகிச்சை பலனின்றி மற்றொருவரும் பலியாகினார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
பலியானவர்கள் தஷார் கிராமத்தைச் சேர்ந்த எஸ். டபிள்யூ. சினவோஷாங், கரசோம் கிராமத்தைச் சேர்ந்த ஒய். வாஷும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பதுங்கியிருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று கார்களின் முன்பக்கக் கண்ணாடிகளும் பின்பக்கக் கண்ணாடிகளும் சேதமடைந்தன.
இரண்டு பேர் கொல்லப்பட்டதில் தங்கள் சமூகத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று குகி ஸோ கவுன்சில் மறுத்துள்ளது. அதேசமயம், டாங்க்குல் நாகா லாங் செயற்குழு வெளியிட்ட அறிக்கையில், இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த 2023-இல் ஏற்பட்ட கலவரத்தால் பெருமளவில் உயிரிழப்புகள் மற்றும் பொருள்சேதங்கள் நேரிட்டன. கடந்த ஆண்டுமுதல் மோதல்கள் குறைந்தபோதிலும், இரு குழுக்களின் தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்துவது தொடா்கதையாக உள்ளது.