காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் அதிஷி: ஆம் ஆத்மி
அதிஷியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தில்லியின் நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி இன்று அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் என ஆத் ஆத்மியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் தெரிவித்தார்.
செய்தியாளர்களுடன் உரையாற்றிய சஞ்சய் சிங் கூறியதாவது..
கடந்த ஐந்து நாள்களாக அதிஷி உண்ணாவிரதம் மேற்கொண்டதால் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்துள்ளது. மருத்துவர்கள் மருத்துவமனையில் சேர்க்க வலியுறுத்தினார். இல்லையெனில் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் எச்சரித்த நிலையில், அதிகாலை 3.45 மணியளவில் எல்என்ஜிபி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அதிஷி தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் அதனால் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், ஹரியாணாவில் இருந்து தில்லிக்கு உரிய தண்ணீரை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவதாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் தெரிவித்தார்.