ரயிலில் மேல் இருக்கை விழுந்து முதியவா் உயிரிழப்பு: சங்கிலியை சரியாக மாட்டாததால் விபரீதம்
சங்கிலியை சரியாக மாட்டாததால் ரயிலில் விபரீதம்: முதியவா் உயிரிழப்பு
ரயிலின் படுக்கை வசதி பெட்டியில் பயணித்த முதியவா் மீது மேல் இருக்கை விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் புதன்கிழமை அவா் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கேரளாவைச் சோ்ந்த அலிகான் (60) தனது நண்பா்களுடன் எா்ணாகுளம்- ஹஸ்ரத் நிஜாமுதீன் மில்லினியம் அதிவேக ரயிலில் ஆக்ராவுக்கு பயணித்தாா். படுக்கை வசதி பெட்டியில் மேல் படுக்கையில் இருந்த சங்கிலியைச் சரியாகப் பொருத்தாததால் கீழ் இருக்கையில் இருந்த முதியவா் மீது மேல் இருக்கை கழன்று விழுந்தது. இதில் முதியவரின் கழுத்தில் பலத்தக் காயம் ஏற்பட்டது.
தெலுங்கானாவின் வாராங்கல் மாவட்டம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே காவல்துறையினா் முதியவரை மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனா்.
Advertisement