குடியரசுத் தலைவர் உரை -
இந்தியா

அவசரநிலை பிரகடனம் ஒரு கருப்பு நாள்.. குடியரசுத் தலைவர் உரை; எதிர்க்கட்சிகள் முழக்கம்

அவசரநிலை குறித்து குடியரசுத் தலைவர் பேசியதல் கூட்டுக்கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர்.

பிடிஐ

புது தில்லி: நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் இன்று உரையாற்றிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, அவசரநிலை பிரகடனம் குறித்துப் பேசியதால், எதிர்க்கட்சிகள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியதை முன்னிட்டு, நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு இன்று உரையாற்றினார்.

மத்திய அரசின் கொள்கைகள், கடந்தகால ஆட்சியின் சாதனைகள், நாட்டின் பல்வேறு முன்னேற்றப் பணிகள் குறித்து உரையாற்றிய திரௌபதி முர்மு, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட அவசரநிலை பிரகடனம் என்பது ஒரு கருப்பு நாள் என்று கூறினார்.

அவசர நிலை பிரகடனம் குறித்து குடியரசுத் தலைவர் பேசத் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் எதிர்த்துக் கூச்சலிட்டனர்.

எதிர்க்கட்சிகளின் கூச்சலுக்கு இடையே பேசிய திரௌபதி முர்மு, அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியது இந்திய அரசமைப்பின் மீது நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல், இது நாட்டின் மிகப்பெரிய இருண்டகாலமாக மாறியது. எமர்ஜென்சியின் போது ஒட்டுமொத்த நாடும் குழப்பத்தில் ஆழ்ந்தது. ஆனால் அத்தகைய அரசியலமைப்புக்கு எதிரான தாக்குதலை எதிர்கொண்டு தேசம்தான் வெற்றி பெற்றது.

நாட்டின் ஜனநாயகத்தை களங்கப்படுத்தும் ஒவ்வொரு முயற்சியையும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கண்டிக்க வேண்டும்.

அவசரநிலை பிரகடனம் என்பது இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலம். ஆனால் நடந்துகொண்டிருப்பது இந்தியாவின் காலம், அடுத்த 1000 ஆண்டுகள் உலக அரங்கில் முன்னேற்றத்தில் இந்தியா கோலோச்சும். ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை தகர்க்கும் செயலில் யாரும் ஈடுபடக்கூடாது. வதந்திகளைப் பரப்பக் கூடாது, வதந்தி பரப்பி நாட்டின் பெருமையை குலைக்கும் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் முர்மு கூறினார்.

மேலும், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை குலைக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த திங்கள்கிழமை தொடங்கிய பதினெட்டாவது மக்களவையின் முதல் இரு நாள்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனா். புதன்கிழமையன்று குரல் வாக்கெடுப்பு மூலம் அவைத் தலைவா் தோ்வு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவா் உரையாற்றினார்.

குதிரைப் படை அணிவகுப்பு

முன்னதாக, குதிரைப் படை அணிவகுப்புடன் குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்து நாடாளுமன்றத்துக்கு திரௌபதி முர்மு அழைத்துவரப்பட்டார்.

குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு

நாடாளுமன்றத்தில் கஜ வாயிலில் இருந்து குடியரசுத் தலைவரை பிரதமா் மோடியும் இரு அவைகளின் தலைவா்களும் வரவேற்று அழைத்துச் சென்றனர். பின்னா், மக்களவையில் நடைபெறும் கூட்டுக் கூட்டத்தில் அவா் உரையாற்றினார். இந்த உரையில், பிரதமா் மோடி தலைமையிலான புதிய அரசின் கொள்கைகள், செயல்திட்டம், கடந்த ஆட்சியின் சாதனைகள் குறித்து பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT