அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில், வினாத்தாள் கசிந்த சம்பவத்தில், மத்திய அரசு உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.
18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில், நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், நாட்டின் இளைஞர்கள் பெரிய கனவுகளை காணவும், அவற்றை அடைவதற்கான சூழலை உருவாக்கவும் தமது மத்திய அரசு செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
தேர்வு தொடர்பாக குடியரசுத் தலைவர் உரையாற்றத் தொடங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீட் நீட் என முழக்கமிட்டனர்.
எதிர்க்கட்சிகளின் முழக்கத்துக்கு இடையே தொடர்ந்து உரையாற்றிய முர்மு, தேர்வுகளுக்கு இடையூறு விளைவிக்கும் விஷயங்களை எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது, மத்திய அரசு நடத்தும் தேர்வுகள் மற்றும் பணி நியமனங்களில், ஒழுங்கும், வெளிப்படைத்தன்மையும் அவசியம்.
அண்மையில் நடந்த தேர்வில், வினாத்தாள் கசிந்தது தொடர்பான சம்பவத்தில், மத்திய அரசு முறையான விசாரணையை நடத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தருவதில் உறுதியாக உள்ளது.
வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்களைத் தடுக்க, நாடாளுமன்றம் சிறப்புச் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் முர்மு கேட்டுக்கொண்டார். மேலும், தேர்வு முறைகளில் மறுமலர்ச்சியைக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கடந்த திங்கள்கிழமை தொடங்கிய பதினெட்டாவது மக்களவையில், திங்கள், செவ்வாய் என முதல் இரு நாள்கள் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனா். புதனன்று குரல் வாக்கெடுப்பு மூலம் அவைத் தலைவா் தோ்வு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவா் உரையாற்றினார்.
முன்னதாக, குதிரைப் படை அணிவகுப்புடன் குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்து நாடாளுமன்றத்துக்கு திரௌபதி முர்மு அழைத்துவரப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.