ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இவர்களது திருமண அழைப்பிதழ் விடியோ தற்போது வெளியாகியிருக்கிறது.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் இணையருக்கு நிச்சயதார்த்தம் வெகு சிறப்பாக ராஜஸ்தானில் நடைபெற்ற நிலையில், வரும் ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடைபெறவிருக்கிறது.
இந்த இணையரின் திருமணத்தில் பங்கேற்கவிருக்கும் விருந்தாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் திருமண அழைப்பிதழின் விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
மும்பையில் நடைபெறவிருக்கும் மிகப் பிரம்மாண்ட திருமண விழாவுக்கான அழைப்பிதழும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வகையில் பிரம்மண்டமாகவே அமைந்துள்ளது.
இந்த அழைப்பிதழ் ஒரு தங்க நிறப் பெட்டகத்தில் பெருமாளின் நாம முத்திரையுடன் காணப்படுகிறது. அந்த தங்க நிறப் பெட்டகம் வெறும் மேல் உறைதான். அதை திறந்தால் ஆரஞ்சு நிறப் பெட்டகம் உள்ளது. அதில் இறைவன் விஷ்ணுவின் படம் இடம்பெற்றுள்ளது. அந்த விஷ்ணுவின் படத்தை நெருங்கிச் சென்று பார்த்தால், அதில் லஷ்மி படமும் தெரிகிறது. பெட்டகம் முழுக்க விஷ்ணு மந்திரம் பதியப்பட்டுள்ளது. அந்தப் பெட்டகத்தைப் பிரித்தால் மேல் பகுதியில் வைகுந்தக் காட்சி எம்பிட்ராயட்ரி செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்த பெட்டகத்தைத் திறந்ததும் விஷ்ணு பாடலும் இசைக்கிறது.
பெட்டிக்குள் இரண்டு பாகமாகப் பிரித்து இரண்டு பெட்டிகள் உள்ளன. அதில் வலது புறத்தில் இருப்பதுதான் அழைப்பிதழ். முதலில் விஷ்ணு உருவமும், அதனை திறந்ததும் பிள்ளையார் படமும் நடுப்பக்கத்தில் திருமண அழைப்பிதழும் இடம்பெற்றுள்ளது. பிறகு ராதா - கிருஷ்ணன் புகைப்படமும், அதற்குள் ஒரு சிறிய உறைக்குள் ஒரு கைப்பட எழுதப்பட்டு அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் கடிதமும் இடம்பெற்றுள்ளது.
பிறகு அடுத்து கடவுள் விஷ்ணு - லஷ்மி படங்களும் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் தனித்தனி பிரேம் போட்ட இறைவன் படங்களாகும். அழைப்பிதழின் இறுதியில், மிக அழகிய வரவேற்பு வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.
அடுத்த பெட்டகத்தில், ஒரு அழகிய இறைவன் உருவங்கள் அடங்கிய பரிசுப்பொருள் இடம்பெற்றுள்ளது. அதற்குக் கீழே, காஷ்மீரில் தயாரிக்கப்பட்ட ஒரு சால்வையும், அதன் சிறப்பு என்ன என்பது குறித்த விவரமும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதை விட அதிக வேலைப்பாடு கொண்ட திருமண அழைப்பிதழ்களும் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், மிக முக்கிய விருந்தினர்களுக்கு அவை வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திருமண வைபவம் மூன்று நாள்கள் நடைபெறவிருக்கிறதாம். சுப விவாகம், சுப ஆசிர்வாதம், மங்கல் உத்சவம் என ஜூலை 14ஆம் தேதி வரை களைகட்டவிருக்கிறது.
திருமணத்துக்கு முன்பு, இணையர் இருவரும் தங்களது நெருங்கிய நண்பர்களுக்க இரண்டு விருந்து நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.