நீட் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி எதுவும் பேசாமல் அமைதி காப்பதாக, மோடியை கிண்டலடித்து காங்கிரஸ் கேலிச்சித்திரம் வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: நீட் தேர்வுத்தாள் கசிய விடப்பட்டதால் நாட்டிலுள்ள லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் அபாயத்தில் உள்ளது.
24 லட்சம் இளைஞர்களின் கடின உழைப்பு, அவர்களின் குடும்பங்கள் கடினமாக உழைத்து ஈட்டிய பணம், அவர்களின் கனவுகள், நம்பிக்கைகள் ஆகிய இவையெல்லாம் சுக்கு நூறாய் உடைந்துள்ளன... ஆனால் நரேந்திர மோடி அமைதியாக உள்ளார்.
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நீதி கேட்டு வீதிகளில் திரண்டுள்ளனர். ஆனால், இதைக் குறித்து, நரேந்திர மோடி கவலைப்படவே இல்லை.
அதேவேளையில், இளைஞர்களுக்கு நீதி கேட்டு மக்கள் தலைவர் ராகுல் காந்தி நீட் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது அவருடைய ஒலி பெருக்கி அணைக்கப்படுகிறது.
‘நீட் விவகாரம் நாடாளுமன்ற மாண்புக்கு நல்லதல்ல’ என்று மோடியின் அமைச்சர்கள் வெட்கமேயின்றி பேசுகிறார்கள்.
இளைஞர்களுக்கு நீதி வழங்குவதன் மூலம் நாடாளுமன்றத்தின் மாண்பு களங்கப்பட்டு விடுமா? வினாத்தாள் கசிவு மூலம் நாட்டின் அடித்தளத்தை பலவீனப்படுத்தியோரை தண்டிப்பதன் மூலம் நாடாளுமன்றத்தின் மாண்பு குறைந்துவிடுமா?
நாட்டிலுள்ள இளைஞர்கள் விடை கோருகிறார்கள், இவற்றுக்கு நரேந்திர மோடி கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என்று கடும் விமர்சனங்களை பதிவிட்டுள்ளது காங்கிரஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.