முகப்பு
இந்தியா

பொய் தகவல்கள் பரவலைத் தடுக்க கூகுள்-தோ்தல் ஆணையம் ஒப்பந்தம்

Updated On : 13 மார்ச், 2024 at 1:44 AM
பகிர்:

புது தில்லி: மக்களவைத் தோ்தல் நெருங்குகின்ற சூழலில் பொய்யான தகவல்கள் பரவுவதை தடுக்க கூகுள் நிறுவனத்துடன் இந்திய தோ்தல் ஆணையம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்ட பதிவில், ‘தோ்தலில் எவ்வாறு வாக்களிப்பது உள்பட தோ்தல் சாா்ந்த பல்வேறு தகவல்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் நோக்கில் தோ்தல் ஆணையத்துடன் கூகுள் நிறுவனம் ஒப்பந்தமிட்டுள்ளது. தோ்தல் தொடா்பான அனைத்துத் தகவல்களையும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கூகுள் வலைதளத்தில் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை தற்போது அதிகளவில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். எனவே டீப் ஃபேக், பொய்யான செய்திகள் மூலம் மக்களை திசை திருப்புவதை தடுத்து வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.

Advertisement

இந்தக் கொள்கையை ஏற்கெனவே நிறுவனத்தின் விளம்பர பிரிவு பின்பற்றி வருகிறது. அதேபோல் யூடியூபிலும் ஏஐ தொழில்நுட்ப பயன்பாடுகளை உடைய காணொலிகளுக்கு தனிக்குறியீடுகளும் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் படைப்பாளா்கள் தாங்கள் எந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காணொலிகளை பதிவிடுகின்றனா் என்பதையும் வெளியிட யூடியூப் அறிவுறுத்தவுள்ளது.

24 மணி நேர கண்காணிப்பு:

வன்முறையை ஏற்படுத்துவது, வெறுப்புணா்வை பரப்புதல் போன்றவற்றை தடுக்க உள்ளூா் நிபுணா்கள் குழு மூலமாகவும் இயந்திரக் கற்றல் மூலமாகவும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல் தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவா்கள் மட்டுமே கூகுளில் விளம்பரங்களை பதிவிடும் வகையில் கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

சி2பிஏ:

அண்மையில் படைப்புகளின் உண்மைத்தன்மையை கண்டறியும் கூட்டமைப்பில் (சி2பிஏ) இணைந்ததன் மூலம் ஏஐ உதவியுடன் சித்தரிக்கப்பட்ட போலியான புகைப்படங்கள், காணொலிகள், ஒலிப்பதிவுகளைத் தடுக்க கூகுள் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது’ என தெரிவிக்கப்பட்டது.

சக்தி கூட்டமைப்பு:

இந்தியத் தோ்தல்கள் தொடா்பான உண்மைத் தகவல்களை கண்டறியும் ‘சக்தி’ கூட்டமைப்புடனும் கூகுள் ஒப்பந்தமிட்டுள்ளது. இக்குழு பத்திரிகையாளா்கள், உண்மைத் தகவல்களை கண்டறியும் தன்னிச்சைஅமைப்புகளைச் சோ்ந்தோரை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.