பாஜகவின் வங்கிக் கணக்குகளை உடனடியாக முடக்க வேண்டும்: கார்கே
பாஜகவின் வங்கிக் கணக்குகளை உடனடியாக முடக்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் அதன் வலைதளத்தில் வியாழக்கிழமை பதிவேற்றியது.
இது குறித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவரது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், "எஸ்பிஐ வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு 50% நன்கொடை கிடைத்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு 11% நிதி மட்டுமே கிடைத்தது.
சந்தேகத்திற்குரிய பல நன்கொடையாளர்கள் உள்ளனர். இவர்கள் யார்? எந்த நிறுவனங்கள்?
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனைக்குப் பிறகு பல நிறுவனங்கள் நன்கொடை அளித்தது ஏன்? அந்த நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்தது யார்?
தேர்தல் பத்திர முறைகேடு குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் உயர்மட்ட விசாரணையை கோருகிறோம்.
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. ஆனால், கோடி, கோடியாக பணம் ஈட்டிய பாஜக மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தேர்தல் பத்திரங்கள் மூலம் சட்டவிரோதமாக நிதி பெற்றதனால் , பாஜகவின் வங்கிக் கணக்குகளை உடனடியாக முடக்க வேண்டும் என்று கோருகிறோம்." எனத் தெரிவித்தார்.