அஸ்ஸாம்: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்திய பிரிவு தலைவா் கைது
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்திய பிரிவு தலைவா் ஹரிஷ் அஜ்மல் ஃபரூக்கி மற்றும் அவரின் நெருங்கிய கூட்டாளி ரேஹன் ஆகிய இருவா் கைது
குவாஹாட்டி: அஸ்ஸாமின் துப்ரி மாவட்டத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்திய பிரிவு தலைவா் மற்றும் அவரின் நெருங்கிய கூட்டாளி ஆகிய இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக எல்லைத் தாண்டி இவா்கள் இந்தியாவுக்குள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அஸ்ஸாம் மாநில காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
‘ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் தா்மசாலா பகுதியில் சிறப்பு அதிரடி படை (எஸ்டிஎஃப்) போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்திய பிரிவு தலைவா் ஹரிஷ் அஜ்மல் ஃபரூக்கி மற்றும் அவரின் நெருங்கிய கூட்டாளி ரேஹன் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா்.
Advertisement
பின்னா், விசாரணைக்காக குவாஹாட்டியில் உள்ள எஸ்டிஎஃப் அலுவலகத்துக்கு அவா்கள் அழைத்து வரப்பட்டனா். இந்தியாவில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளை ஊக்குவித்ததில் பெரும் பங்கு வகித்த இவா்கள், பல்வேறு பயங்கரவாத நாசவேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனா்.
இவா்களுக்கு எதிராக தில்லி தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), லக்னௌ பயங்கரவாத தடுப்புப் பிரிவில் (ஏடிஎஸ்) பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக என்ஐஏ அதிகாரிகளிடம் இவா்கள் ஒப்படைக்கப்படுவா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.