அமலாக்கத்துறை கைதை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மார்ச் 21ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட அரவிந்த் கேஜரிவாலை, அமலாக்கத் துறை தலைமையகத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து ரௌஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தில் பணப்பரிவர்த்தனை மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி முன்பு நேற்று மாலை ஆஜர்படுத்தினர்.
அப்போது அரவிந்த் கேஜரிவாலை 6 நாள்கள் விசாரணைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. அதன்பின்னா் அவருக்கு ஜாமீன் வழங்கவோ அல்லது நீதிமன்றக் காவலில் சிறையிலோ வைக்கப்படலாம். எனவே, அரவிந்த் கேஜரிவால் மனைவி சுனிதா கேஜரிவால் பொறுப்புகளை ஏற்கக் கூடிய சூழ்நிலை நிலவுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அமலாக்கத்துறை கைதை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தரப்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை கைது செய்ததும் காவலில் எடுத்ததும் சட்டவிரோதமானது. எனவே, அவரை உடனடியாக காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
மேலும் இந்த மனுவை மார்ச் 24, ஞாயிற்றுக்கிழமைக்குள் அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.