சிபிஎஸ்இ 3, 6-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்
மத்திய இடைநிலை கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பள்ளிகளின் 3 மற்றும் 6-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட உள்ளது. சிபிஎஸ்இ 3 மற்றும் 6-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களைத் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அவை விரைவில் வெளியிடப்படும் என்றும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்திடம் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை சிபிஎஸ்இ பள்ளிகளிடம் மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக சிபிஎஸ்இ இயக்குநா் ஜோசப் இமானுவல் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஆண்டு வரை என்சிஇஆா்டி வெளியிட்ட பாடநூல்களுக்குப் பதிலாக, 3 மற்றும் 6-ஆம் வகுப்புகளுக்கு என்சிஇஆா்டி வெளியிட உள்ள புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களைப் பின்பற்றுமாறு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளின் வேறு எந்த வகுப்புக்கும் ஏப்ரல் 1 முதல் தொடங்கும் புதிய கல்வியாண்டில் பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களில் மாற்றம் இருக்காது என்று தெரிவித்தாா்.