முகப்பு
இந்தியா

வேலையின்மை பிரச்னையை அரசால் தீர்க்க முடியாது: மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர்

வேலையின்மை பிரச்னையை தீர்க்க முடியவில்லை என்றால் பாஜக இடத்தை காலி செய்ய வேண்டும் என்று ப.சிதம்பரம் விமர்சனம்.

Updated On : 27 மார்ச், 2024 at 8:44 AM
தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்
பகிர்:

வேலையின்மை போன்ற சமூக பிரச்னைகளை அரசால் மட்டும் தீர்க்க முடியாது என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் வேலைவாய்ப்பு பிரச்னையை முன்னிறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மத்திய பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றசாட்டுகளை வைத்து தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளிலும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்புகள் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், புதுதில்லியில் உள்ள மனிதவள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய “இந்திய வேலைவாய்ப்பு 2024” ஆய்வு அறிக்கையை வெளியிட்ட ஆனந்த நாகேஸ்வரன் வேலைவாய்ப்பு குறித்து பேசிய கருத்துகள் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விழாவில் ஆனந்த நாகேஸ்வரன் பேசியது:

“வேலைவாய்ப்புக்கு அரசால் என்ன செய்ய முடியும் என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு சமூகம் அல்லது பொருளாதார ரீதியிலான பிரச்னைகளில் அரசு தலையீடு இருக்கிறது நினைப்பது தவறு. அந்த மனநிலையில் இருந்து நாம் வெளிவர வேண்டும்.

வேலையின்மை பிரச்னையை மத்திய அரசால் மட்டுமே முழுமையாக சரி செய்ய முடியாது. நாட்டில் லாபம் ஈட்டக்கூடிய கார்ப்ரேட் நிறுவனங்கள் அதிகளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

இந்தியாவில் தொழிலாளர்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகள் உள்ளது. குறிப்பாக பெண் தொழிலாளர்கள் மீதான பாரபட்சம் தொடர்ந்து வருகிறது.

கடந்த 2005 முதல் 2022 வரை வேலைவாய்ப்பு கணக்கீடுகளை ஒப்பிட்டால், வேலை வாய்ப்பு வழங்கும் சதவிகிதம் சீராக உயர்ந்து வருகின்றது. கரோனாவுக்கு பிறகு பல்வேறு முயற்சிகள் எடுத்த போதிலும், வேலையின்மை பிரச்னை உள்ளது.” எனத் தெரிவித்தார்.

இதனை விமர்சித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்ட பதிவில்,

“அரசால் வேலையின்மை பிரச்னையை தீர்க்க முடியாது என்ற வாக்குமூலத்தை பொருளாதார ஆலோசகர் வழங்கியுள்ளார். இதுதான் பாஜக அரசின் கருத்தாகவும் இருக்கும் பட்சத்தில், இடத்தை காலி செய்யுங்கள் என்று அவர்களிடம் நாம் தைரியமாக சொல்ல வேண்டும். இந்த பிரச்னையை எதிர்கொள்ள காங்கிரஸிடம் திட்டங்கள் உள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு மத்தியில் பொருளாதார ஆலோசகரின் கருத்து அரசியல் அரங்கில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →