கரோனா பரவலின்போது இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசிதான் அதிகம் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் சீரம் நிறுவனம் இந்தத் தடுப்பூசியை தயாரித்து விற்பனை செய்தது.
கரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியால் மிக அரிதான பக்கவிளைவாக ரத்தம் உறைதல் ஏற்படலாம் என்று லண்டன் உயா்நீதிமன்றத்தில் அதன் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராசெனகா ஒப்புக் கொண்டது.
இந்நிலையில், கோவாக்ஸின் தடுப்பூசி பாதுகாப்பானது என்று அதனை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.
அதில், “ கோவாக்ஸின் தடுப்பூசி உரிமம் பெறும் வழிகாட்டுதல் மூலம் 27,000 பேரிடம் பரிசோதிக்கப்பட்டது. உரிய பாதுகாப்பு நவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு பரிசோதனைகள் நடைபெற்றது.
கோவாக்ஸினின் பாதுகாப்பானது மத்திய சுகாதார அமைச்சகத்தால் மதிப்பீடு செய்யப்பட்டது.
அனைத்து ஆய்வுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மாரடைப்பு, ரத்தம் உறைதல் போன்ற எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
எங்களது அனைத்து தடுப்பூசிகளுக்கும் பாதுகாப்பே முதன்மையானது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.